அண்மை செய்தி புலச் செய்திகள் 

சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வு 2026

சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் அற்றார் அழிபசி தீர்த்தல் நிகழ்வு 2026
***********************************
சுவிற்சர்லாந்து நாட்டின் சூரிச் மாநிலத்தில் சூரிச் சிவன் ஆலய
சைவத்தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் நடாத்தும் “அற்றார் அழிபசி தீர்த்தல்” நிகழ்வும் தாயக உணவுக் கண்காட்சியும் பத்தாவது ஆண்டில் பெருந்திரளான மக்கள் மத்தியில் கடந்த 26.04.2026 ஞாயிற்றுக்கிழமையன்று Sporthalle Unterrohr Schlieren
Unterrohrstrasse 2
8952 Schlieren எனும் இடத்தில் சைவத்தமிழ்ச் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சி.இராதாகிருஷ்ணன் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் ஆசியுரையினை சூரிச் சிவன் ஆலய பிரதமகுரு கைலாசநாதக்குருக்கள் நிகழ்த்த அதனைத் தொடர்ந்து நடன நிகழ்வுகள் இடம்பெற்றது. தொடர்ந்து கருத்துரைகளை சைவத்தமிழ்ச் சங்க செயலாளர் திரு.செ.சிறிஸ்கந்தவேள், சைவத்தமிழ்ச் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சி.இராதாகிருஷ்ணன் என பலர் ஆற்றியதோடு இசை நிகழ்வுகள், நாடக ஆற்றுகைகள், எனப் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. வருடந்தோறும் நடைபெறும் இந் நிகழ்வின் சிறப்பு ஏற்பாடுகளாக நூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்ட தாயக உணவுகள் காட்சிப்படுத்தலுடன் விற்பனை செய்யப்படுவதும் பெருந்திரளான மக்கள் ஆர்வத்தோடு தாயக உணவுகளை சுவைத்து மகிழ்வதும் அதுமட்டுமன்றி தாயகத்தின் இயற்கை வளமான பனைவளத்தின் கைப்பணிப் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்படுவதும் சிறப்பாக நோக்கப்படும். அத்தனை உணவுகளையும் நாளாந்த வாழ்வியலில் பயன்படுத்தும் தாயகத்தின் ஒன்பது மாவட்டங்களின் பெயர்கள் தாங்கிய வர்ணப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டதோடு தாயகத்தின் பாரம்பரிய தின்பண்டங்கள், பழவகைகள், மரக்கறி வகைகள், குளிர்பானங்கள், சிறுவர்கள் விரும்பும் தும்புமிட்டாய்கள் என விழா மண்டபமே தாயகத்தில் நிற்பதுபோல் ஓர் உணர்வை யாவர் மனதிலும் தூண்டி நிற்கும்.

தாய் மண்ணை இழந்து பிரிதொரு நாட்டில் இயந்திரமயமான சூழல் ஓட்டத்தில் வாழும் மக்களுக்கு வருடத்திற்கு ஒருதடவை சூரிச் சிவன் ஆலய சைவத்தமிழ்ச் சங்கம் நடாத்துகின்ற இவ் அரும்பெரும் நிகழ்வானது மனங்களில் மட்டற்ற மகிழ்ச்சியையும் மனம் நிறைந்த குளிர்ச்சியையும் கொடுத்து நிற்கிறது…

இதனை ஏற்பாடு செய்து ஆண்டுதோறும் நடாத்தி வரும் சிவன் ஆலய சிவத் தொண்டர்கள், இளந்தொண்டர் சபையினர் அனைவரையும் மெய்யன்புடன் பாராட்டுவதோடு நன்றியுணர்வோடு நோக்கவும் தகும்.

இந் நிகழ்வில் மேலும் சிறப்புச் சேர்த்து நிற்பது இங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களின் இலாபங்கள் சைவத்தமிழ்ச் சங்கத்தால் தாயகம் முகமாலையில் நடாத்தப்படும் சிவபுரவளாக மூதாளர் பேணலகத்திற்கு வளங்கப்படுகிறது என்பது சிவ பக்தர்களுக்கும் இந்நிகழ்வில் கலந்து கொள்வோர்களுக்கும் ஆத்ம பலத்தை கொடுத்து நிற்கிறது.

இந் நிகழ்வில் ஈழத்தமிழ் மக்களோடு சுவிஸ் நாட்டவர்கள், பல்லினத்தவர்களும் கலந்து நிகழ்வை கண்டு களித்ததோடு தமிழரின் பாரம்பரிய உணவுகளை சுவைத்து மகிழ்ந்தார்கள். காலை தொடக்கம் மாலை வரை இந் நிகழ்வு நடைபெற்று இனிதே நிறைவு பெற்றது.

செய்தியாக்கம்:-
து.திலக்(கிரி),
யாழ்.உரும்பையூர்/சுவிற்சர்லாந்து.

அன்மைச் செய்தி

Leave a Comment